10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.10லட்சம் பேர் எழுதுகின்றனர்

10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.10லட்சம் பேர் எழுதுகின்றனர்
10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.10லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: மேனிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கும். இந்த தேர்வில் 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுதுவார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இன்றுடன் அந்த தேர்வுகள் முடிவடைகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த தேர்வும் ஏப்ரல் 8ம் தேதியுடன் முடிவடையும்.

பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த 12616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 பேர் ஆண்கள். 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பேர் பெண்கள். மாற்றுப் பாலினத்தவர் 1. இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் இந்ததேர்வில் பங்கேற்கின்றனர். 3350 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும். 28ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 1ம் தேதி கணக்கு, 4ம் தேதி அறிவியல், 6ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 8ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15க்கு முடியும். தேர்வின்போது வழக்கமாக அனுமதிக்கப்படும் 15 நிமிடம் இந்த தேர்விலும் அனுமதிக்கப்படுகிறது. தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.