தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது – கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது – கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

 

ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (பகுதி), திருச்சி (பகுதி), அரியலூர் (பகுதி) ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதியன்று திறப்பது வழக்கமாகும். ஆனால் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு மேட்டூர் அணையை திறக்கவில்லை.

எனவே, தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ரூ.77.50 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. தற்போது டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதால், விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் இந் தத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கிடையில், தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் எவ்வளவு பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கணக்கெடுத்து வருகிறது.

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 93 ஆயிரத்து 470 மில்லியன் கனஅடியாகும். கடந்த ஆண்டு இதே நாளில் அணை முழு கொள்ளளவை எட்டியிருந்தது. ஆனால் தற்போது 38 ஆயிரத்து 359 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. ஒரே ஆண்டில் 55 ஆயிரத்து 111 மில்லியன் கனஅடி நீர் குறைந்துள்ளது. இருப்பினும், மேட்டூர் அணை திறக்கப்படுமா? என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.