ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு: தொடர் போராட்டம் நடத்த எச்சரித்த செவிலியர்கள் சங்கம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்யும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்தியப் பொது சுகாதார தர நிர்ணயங்கள் பரிந்துரைத்த மருத்துவப் பயனாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருந்து வருகின்றன.
பழமையான மருத்துவமனைகளில் புதிய புதிய திட்டங்களும் பிரிவுகளும் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்ற நிலையில், மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட செவிலியர் பணியிடங்களே இன்று வரை தொடர்கின்றன.
கிராமப்புறங்களில் மருத்துவ சேவை வழங்கும் பொதுச் சுகாதாரத் துறையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் என்பது மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளன. மருத்துவப் பயனாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், மருத்துவப் பயனாளர்களுக்குத் தகுந்த நேரத்தில் செவிலியர்களால் தரமான சேவையை வழங்க இயலாத நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால், மருத்துவ சேவைகளுக்காக அரசு மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இதைச் சரி செய்யக் கோரி, மருத்துவப் பயனாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கப் பல முறை முறையீடுகள் செய்தும் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
ஆனால், அரசு செவிலியர்களின் இந்தக் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒரு இடத்தில் பணி செய்யும் செவிலியர்களைப் பிற மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பொதுச் சுகாதாரத் துறையில் உள்ள 192 பணியிடங்களையும் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 பணியிடங்களையும் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக, கடந்த 21.07.2027 அன்று எங்கள் சங்கம் சார்பாக ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் சென்னை DMS வளாகத்தில் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் நடத்தினோம்.
இந்த நிலையில், தற்போது அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து 210 செவிலியர் பணியிடங்களைச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சேலம், திருச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒப்படைப்பு செய்துள்ளது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஊழியர் பற்றாக்குறையைச் சரி செய்யப் புதிய பணியிடங்களை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும். அதைத் தவிர்த்து, இருக்கிற பணியிடங்களை மாற்றுவதன் மூலம் அந்த மருத்துவமனைகளின் சேவை பாதிக்கப்படுவதுடன் செவிலியர்களின் பணிச்சுமையும் அதிகரிக்கும்.
மேலும், பணி நிரந்தரத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் செவிலியர்களின் பணி நிரந்தர வாய்ப்பும் பறிபோகின்ற நிலை உருவாகும். இது செவிலியர்களின் மத்தியில் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தும், பலமுறை முறையீடுகள் செய்தும் செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையிலும், இருக்கிற உரிமையைப் பறித்து வரும் நிலையிலும், தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆட்குறைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கைவிட்டு அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் வேண்டும்.