தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான்

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான்

பிரபல டைரக்டர் தங்கர்பச்சான் டைரக்ட் செய்யும் படத்தில் அவரது மகன் நாயகனாக அறிமுகம். மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி அவர்கள் காமிராவை இயக்கி தொடங்கி வைத்தார். 

பல்வேறு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற பரபரப்பான திரைப்படங்களை இயக்கியவர், தங்கர் பச்சான். பார்த்திபன், சத்யராஜ்,சேரன், பிரபுதேவா போன்றவர்களை முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் கதைநாயகர்களாக வாழ வைத்த இவர், தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.  இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்கிறார்.


கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை உருவாக்கிய தங்கர் பச்சான் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார்.

தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

டான்ஸ்மாஸ்டர் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க , மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா,மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் இப்படத்திற்கு இசை தரண்குமார். ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவபாஸ்கரன். படத்தொகுப்பு சாபு ஜோசப். கலை சக்தி செல்வராஜ், சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் சில்வா கையாள்கின்றனர். பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.


இப்படத்தின் படப்பிடிப்பை முன்னாள் சென்னை பெருநகர மேயர் மற்றும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி அவர்கள் காமிராவை இயக்கி தொடங்கி வைத்தார். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பங்கு பெறும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையிலேயே தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.