இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்
![இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்](https://chennaipatrika.com/uploads/images/image_750x_662f23fa44e6d.jpg)
பீஜிங்: இந்தியா வருவதை தவிர்த்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திடீர் பயணமாக சீனா சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் கடந்த வாரம் இந்தியா வர இருந்தார். உலகிலேயே மின்சார வாகன தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் கிளையை இந்தியாவில் நிறுவ எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இந்திய பயணத்தில் அவர் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம் இந்திய பயணத்தில் பிரதமர் மோடியை மஸ்க் சந்திப்பதை பயன்படுத்திதேர்தப் பிரசாரத்தில் ஆதாயம் தேட பாஜ திட்டமிட்டிருந்தது.
இந்த அரசியலில் சிக்கிக் கொள்ள விரும்பாத மஸ்க், கடைசி நிமிடத்தில் இந்திய பயணத்தை ஒத்திவைத்தார். டெஸ்லாவில் பணிகள் இருப்பதால் இந்தியா வர முடியவில்லை எனவும் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவேன் என்றும் அவர் டிவிட்டரில் அறிவித்தார். இந்நிலையில், இந்தியா வருவதை தவிர்த்த மஸ்க் திடீர் பயணமாக நேற்று சீனாவுக்கு வந்தார். தலைநகர் பீஜிங்கில் அவர் சீன பிரதமர் லீ கியாங்கை சந்தித்து பேசினார். டெஸ்லாவின் தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை சீன சந்தையில் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது சீன பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.