டெல்லியின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, கர்த்தவ்யா பாதை உள்ளிட்ட புது டெல்லியின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இன்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி ‘சலோ சன்சாத்’ என்ற பிரம்மாண்ட பேரணியை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இதனையொட்டி, புது டெல்லி மாவட்டம் மற்றும் நாடாளுமன்றச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், அனுமதியின்றி பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை இந்த நாடாளுமன்றப் பேரணிக்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுடன், முக்கிய சாலைகளில் பல அடுக்கு தடுப்புகளை (Barricades) அமைத்துக் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளனர். தடையை மீறி பேரணி நடத்த முயல்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.