கணியாமூர் சுந்தர பாண்டியன் கல்வெட்டு

கணியாமூர் சுந்தர பாண்டியன் கல்வெட்டு

கணியாமூர் - 750 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்பது நாள் திருவிழா - சுந்தரபாண்டியன் கல்வெட்டு சொல்லும் வியப்பான செய்தி

கோயில்கள் வழிபாட்டு தலங்களாக, பக்திக்காக மட்டும்தான் ஏற்படுத்தப்பட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.

அரசியல், கலை, இலக்கியம், ஓவியம், தானியக்கிடங்குகள், கருவூலம் என பல பயன்பாடுகள் அதில் இருந்தன. ஒரு ஊரின் பெருமை, ஒரு குடும்பத்தின் பெருமை என நிலை நிறுத்தவும் கோயில்கள் பயன்பட்டன.

ஒரு ஊரில் உள்ள கோயில்களில் ஒரு குறிப்பிட்ட விழா நடத்த, அந்த ஊர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் உள்ள முக்கியமான குடும்பத்தினர் கட்டளைதாரர்களாக நியமிக்கப்பட்டனர். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த கட்டளை உரிமையை விட்டுத்தராமல் அந்த விழாவை நடத்த முயற்சிப்பர். அதுதான் அவர்களின் கௌரவம்.

அப்படி ஒரு வரலாற்றுச் சான்று தான் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூரில் உள்ள கோயிலில் இருக்கும் கல்வெட்டு.

இந்த கல்வெட்டை நேரில் படியெடுத்து ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் வியப்பளிக்கின்றன.

கல்வெட்டு இருக்கும் இடம்: மேலது கோயில் மேற்கு தெற்கு மகா மண்டபம் உப பீடம்

காலம்: கோச்சட பன்மர் திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவரின் 11 ஆம் ஆட்சியாண்டு. அதாவது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் - கி.பி. 1261-62 வாக்கில்.

கோயில் பெயர்: கல்வெட்டில் இவ்வூர் "மலாடாகிய ஜனநாத வளநாட்டு வட நரையூர் கூற்றத்து கணியாமறுவூரான பொன்பரப்பின நல்லூர் உடையார் பொன்பரப்பின சோளீசுரம் உடைய நாயனார்" என குறிக்கப்படுகிறது.

இக்கோயிலில் தை மாதம் நடந்த ஒன்பது நாள் திருவிழா பற்றியும், ஒவ்வொரு நாளும் யார் கட்டளைதாரர்கள், பூசைக்கு என்னென்ன பொருட்கள் எந்த அளவு தர வேண்டும் என்பது பற்றியும் இக்கல்வெட்டு விரிவாக பேசுகிறது.

கல்வெட்டின் மூல வாசகம் வரி மாறாமல் கீழே:

கல்வெட்டு பாடம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ உ[ஓ]லைப்படி கோச்சடபன்மர் திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு யக ஆவது மேஷ ஞாயிற்று பூர்வ பச்சத்து தசமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற ரோகினி நாள் மலாடாகிய ஜனநாத வளநாட்டு வட நரையூர் கூற்றத்து கணியாமறுவூரான பொன்பரப்பின நல்லூர் உடையார் பொன்பரப்பின சோளீசுரம் உடைய நாயனார் திருநாள் எழுந்தருள தை மாத[11]

2. ம் - தியதி உபையத்துக்கு நீர் வார்த்த திருகொடி திருநாளுக்கு கைக்கோளர் குறைவறுப்பு திருக்கொடி புடவை, கயிறு திருநாவுக்கரசர் தேவர் திருநாளுக்கு மேற்படியார் குறைவறுப்பு கோவணம்,அரிசி இரு தூளி,கறிஅமுது,திருப்பள்ளிதாமத்து பணம் ஒன்றரை, விளக்கு மா எண்ணெய் குறுணி நாநாழி திரு நாள் ஒளி திருநாளுக்கு விளக்கதரையன் குறைவறுப்ப இரு தூ

 3..ணி குறுணி திருப்பளிதாமத்துக்கு பணம் ஒன்று அரை மா எண்ணெய் குறுணி நாழி இரண்டாம் திருநாளுக்கு ஊர் கணக்கு அவியனூருடையான் வாழவந்தான் குறைவறுப்ப அரிசி இரு தூணி குறுணி திருப்பளிதாமத்துக்கு பண[ம்] ஒன்றறை மா எண்ணெய் குறுணி நாநாழி மூன்றாம் திருநாளுக்கு பூண்டி ஊரவர் குறைவறுப்ப அரிசி இரு தூணி குறுணி திருப்பளிதாமத்துக்கும் ஒன்றறை மா எ

4. ண்ணை குறுணி நாநாழி நாலாம் திருநாளுக்கு மலையமாநாரும் அதிர ஆடுவாரும் நம்பாண்டையும் குறைவறுப்ப அரிசி இரு தூணி குறுணி திருப்பளிதாமத்துக்கு பணம் ஒன்றறை மா எண்ணெய் குறுணி நா நாழி அஞ்சாம் திருநாளுக்கு தொழு அடைத் திருநீறு பரப்பி நாளும் மேற்படி சுந்தர பெருமாள் உள்ளிட்டாரும் சாற்றுகுடை கரியாரும் குறைவறுப்ப அரிசி இரு தூணி குறுணி திருப்பளிதா

 5. மம் ஒன்றரை மா எண்ணை குறுணி நாநாழி. ஆறாம் திருநாளுக்கு நெற்குப்பை உடையாரும் தழுமடை புலியார் உள்ளிட்டாரும் குறைவறுப்ப அரிசி இரு தூணிக்கு குறுணி திருநாளுக்கு பணம் ஒன்றறை மா எண்ணெய் குறுணி நாநாழி. ஏழாம் திருநாளுக்கு பொ- - உடையார்க்கும் மேலைச்சேரி உடையார்க்கும் குறைவறுப்ப அரிசி தூணிக் குறு

 6. ணி திருப்பளிதாமத்துக்கு பணம் ஒன்றறை மா எண்ணை குறுணி நாநாழி எட்டாம் திருநாளுக்கு சாத்தங்குடையார்களும் மணஞ்சேரி பொன்னர் உள்ளிட்டார் குறைவறுப்ப அரிசி இரு தூணிக் குறுணி திருப்பளிதாமத்துக்கு பணம் ஒன்றறை மா எண்ணை குறுணி நாநாழி ஆவுடைய பிள்ளையார் திருநாளுக்கு சபையார் குறைவறுப்ப திருப்பால் போனகத்துக்கு அரிசி முக்குறுணி

 7. பால் ஙசஉ(342) கருப்பு கட்டி பட்டுரு திருப்பளிதாமத்துக்கு பணம் ஒன்று அரை திருக்காப்பு நாணும்.ஒன்பதாம் திருநாள் திரு எழுச்சி திரு உலா புறம் திரு அனந்தலுக்கும் வாணியர் நகரத்தார் குறைவறுப்பு திருக்காப்பு நாணுக்கு பொன்கால் நாச்சியாற்க்கு திருக்காப்பு நாணுக்கும் திரு மாங்கலியத்துக்கும் பொன்கால் திருமந்திரகொடி திரு உத்தரியத்துக்கு பட்டு திருமேற்பூச்சு திருபளிதாமம் திருப்பாவாடைக்கு அ

8. ரிசி கலம் திருவிளக்கு பந்ததுக்கு எண்ணெய் திரு எழுச்சிக்கு திருச்சாந்து திருப்பளிதாமம் திருமாலை திருவாசிகைக்கும் திரு உலா புறத்துக்கும் வேண்டும் திரு செங்கழுநீர் வெள்ளை திருப்பாவாடைக்கும் யிதர தானத்துக்கும்,அரிசி இரு கலம், திருவினை குடை,திரு சூலவட்டம், திரு கொடி ஆடை, - -

கல்வெட்டு முற்று பெறவில்லை.
இக்கல்வெட்டு உணர்த்தும் செய்திகள்:

1. விழா நிர்வாகம் - ஒரு சமூகக் கூட்டமைப்பு:
இது ஒன்பது நாள் விழா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரார், ஒவ்வொரு சமூகத்தார் பொறுப்பு.
முதல் நாள் - கைக்கோளர் (இன்றைய செங்குந்தர் / முதலியார் சமூகத்தினர்). இவர்கள் கொடி புடவை, கயிறு, கோவணம் வழங்குகின்றனர்.

2ம் நாள் - ஊர் கணக்கு அவியனூர் உடையான் வாழவந்தான் என்பவர்.

3ம் நாள் - பூண்டி ஊரவர்.

4ம் நாள் - மலையமானார், அதிர ஆடுவார், நம்பாண்டை.

5ம் நாள் - தொழு அடை, திருநீறு பரப்பி, சுந்தர பெருமாள் உள்ளிட்டார், சாற்றுகுடை கரியார்.

6ம் நாள் - நெற்குப்பை உடையார், தழுமடை புலியார்.

7ம் நாள் - மேலைச்சேரி உடையார்.

8ம் நாள் - சாத்தங்குடையார், மணஞ்சேரி பொன்னர்.

9ம் நாள் - வாணியர் நகரத்தார். இவர்கள் தான் மிக முக்கியமான நாளான திருவெழுச்சி, திரு உலா நாட்களை நடத்துகின்றனர்.

இதன் மூலம் அன்று சமூக நல்லிணக்கம், அனைத்து தரப்பு பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறியலாம்.

2. பொருளாதார அளவீடுகள்:

ஒவ்வொரு நாளும் "அரிசி இரு தூணி குறுணி, திருப்பள்ளித்தாமத்துக்கு பணம் ஒன்றரை, விளக்குக்கு மா எண்ணெய் குறுணி நாநாழி" என ஒரே அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூணி, குறுணி, நாழி, கலம் என்பவை நெல் அளவைகள். மா எண்ணெய் - இலுப்பை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய். திருப்பள்ளித்தாமம் என்பது இறைவனுக்கு சாற்றப்படும் பூமாலைக்கான கட்டணம். கறி அமுது என்பது காய்கறி படையல்.

ஆவுடைய பிள்ளையார் திருநாளுக்கு திருப்பால் போனகத்துக்கு அரிசி முக்குறுணி, பால் 342 நாழி, கருப்புக்கட்டி என தனி கணக்கும் உள்ளது.

9ம் நாள் பொன் மாங்கல்யம், பட்டு உத்தரீயம், திருமேற்பூச்சு, திருச்சாந்து, செங்கழுநீர் மாலை, திருவினைக் குடை, திரு சூலவட்டம், திருக்கொடி ஆடை என அரச விழா போல நடந்துள்ளது.

3. இன்றைய நிலை:

இவ்வளவு சிறப்பாக, ஊர் கூடி விழா எடுத்த கோயில் இன்று வழிபாடு இழந்து நிற்கிறது. கல்வெட்டு முற்றுப்பெறாமல் சிதைந்துள்ளது. இது நமது புறக்கணிப்பை காட்டுகிறது.

கோயில்கள் வெறும் கற்கள் அல்ல, அவை நமது வரலாற்றின் ஆவணக் கிடங்குகள். கணியாமூர் கல்வெட்டு போன்றவை பாதுகாக்கப்பட்டு, படியெடுத்து, வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

வரலாற்றை மீட்டெடுப்போம்!

ஆறகளூர் பொன். வெங்கடேசன்
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்