புலிக்குத்தி கல் - மறக்கப்பட்ட வீரத்தின் சின்னம்

புலிக்குத்தி கல் - மறக்கப்பட்ட வீரத்தின் சின்னம்

நாம் அன்றாடம் வெளியே செல்லும் போது தெருவோரங்களிலும், வயல் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும் பல சிற்பங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அவற்றை நின்று கூர்ந்து கவனிப்பதில்லை.

அவை வெறும் கற்கள் அல்ல. அவை நம் முன்னோர்களின் வாழ்வியலையும், வீரத்தையும், தியாகத்தையும் சொல்லும் வரலாற்று ஆவணங்கள். வழிபாட்டில் இருந்து கைவிடப்பட்ட தெய்வங்களும், மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வீரச்செயல் புரிந்து மாண்ட மாவீரர்களுமே இப்படி சிற்பங்களாக நிற்கிறார்கள்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, சேலம் நகரப்பகுதிக்குள்ளேயே ஏராளமான நடுகற்களும், வீரக்கற்களும் கவனிப்பாரற்று கிடக்கின்றன.

அந்த வகையில் இன்று நான் பார்த்து வந்த மூன்று புலிக்குத்தி நடுகற்களில் ஒன்றைப் பற்றிய பதிவு இது.

புலிக்குத்தி கல் என்றால் என்ன?

பண்டைய காலத்தில் காடுகளில் வாழ்ந்த புலிகள், உணவும் நீரும் தேடி ஊருக்குள் புகுந்து மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கி கொன்று வந்தன. அப்படிப்பட்ட கொடிய புலிகளை எதிர்த்து போராட ஊருக்குள் இருக்கும் வீரம் மிக்க ஒருவன் புலி வேட்டையில் ஈடுபடுவான்.

பல நேரங்களில் அந்த வீரன் புலியை கொன்றுவிட்டு தானும் அந்த போராட்டத்தில் வீரமரணம் அடைவான். அப்படி மக்களுக்காக உயிர் தியாகம் செய்த அந்த மாவீரனுக்கு அவன் உறவினர்களும், ஊர் மக்களும் நடுகல் எடுத்து வழிபடுவர். இதுவே "புலிக்குத்தி கல்" என அழைக்கப்படுகிறது.

சேலம் அல்லிக்குட்டை புலிக்குத்தி கல்

இந்த அரிய புலிக்குத்தி நடுகல் சேலம், அல்லிக்குட்டை அருகே உள்ள வாய்க்கால்பட்டறை என்ற இடத்தில் உள்ளது.

இந்தக் கல்லை கூர்ந்து கவனித்தால் ஒரு முழு வரலாறே தெரிகிறது.

இதில் புலியை கொன்ற வீரன் தானும் இறந்துள்ளான். அவனுடன் வேட்டைக்கு சென்ற வேட்டை நாயும் புலியுடன் கடுமையாக போராடி உயிர் நீத்துள்ளது. கணவன் இறந்த செய்தி கேட்டு, அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி தீப்பாய்ந்து உயிர் விட்டுள்ளாள்.

எனவே இந்த ஒரே நடுகல்லில்
1. புலி 2. புலியுடன் போரிட்ட வீரன் 3. அவனது மனைவி (சதி) 4. வேட்டை நாய் என நான்கு உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதனால் இதை புலிக்குத்தி கல் என்பதோடு, சதிகல் என்றும் அழைக்கலாம்.

இது வெறும் கல் அல்ல, நம் மண்ணின் வீரத்திற்கும், கற்பிற்கும், நன்றிக்கும் அடையாளம்.

இது போன்ற நடுகற்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அடுத்த முறை இது போன்ற சிற்பத்தை காண நேர்ந்தால், சற்று நின்று அதன் வரலாற்றை அறிய முயலுங்கள்.

ஆறகழூர் பொன். வெங்கடேசன்
தலைவர்,
சேலம் வரலாற்று ஆய்வு மையம்