டிக்-டாக் வீடியோ பதிவிட்ட மனைவியை கொன்ற கணவர்

டிக்-டாக் வீடியோ பதிவிட்ட மனைவியை கொன்ற கணவர்

கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் கனகராஜ் (35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (28). இவர் தனியார் என்ஜினீரியங் கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த கனகராஜ் தனது மனைவி நந்தினியை போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் நீண்ட நேரம் பிசியாக இருந்ததால் போனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், நந்தினி வேலைபார்க்கும் தனியார் கல்லூரிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை குத்தினார். இதில் கழுத்து மற்றும் உடலில் கத்தி காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக இறந்துவிட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கனகராஜையும் கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்தது குறித்து கனகராஜ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், நந்தினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் அவ்வப்போது என் குழந்தைகளை பார்க்க செல்வேன். அப்போது அவர் என்னை அலட்சியப்படுத்தி வந்தார். மேலும் நந்தினி டிக்-டாக்கில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை.

இதுகுறித்து பலமுறை போனில் எச்சரித்தேன். ஆனாலும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து டிக்-டாக்கில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். மேலும் நந்தினியை செல்போனில் தொடர்பு கொண்டால் எப்போதும் பிசியாகவே இருந்தது. இதுபற்றி கேட்டதற்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. குழந்தைகளின் நன்மைக்காக சேர்ந்து வாழலாம் என்று பலமுறை நான் கேட்டும் அதற்கும் அவள் பதில் கூறவில்லை.

நேற்று மதியம் நந்தினியை போனில் பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால் பிசி, பிசி என வந்தது. நீண்ட நேரத்துக்கு பின்பும் அவள் எனக்கு போன் செய்யவில்லை. இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவளை தீர்த்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கத்தியுடன் கல்லூரிக்கு சென்றேன். அப்போது நான் நந்தினியிடம் நீ யாருடன் நீண்ட நேரம் பேசி கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டேன். மேலும் நான் சொல்லியும் கேட்காமல் நீ எப்படி டிக்-டாக்கில் வீடியோ பதிவிடலாம் என்று கேட்டேன். அதற்கு அவள் அதை உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நீ உன் வேலையை பார் என்று உதாசீனப்படுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த நான் கத்தியை எடுத்து குத்தி நந்தினியை கொலை செய்தேன். பின்னர் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். 

இவ்வாறு கனகராஜ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.