ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்

ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்
ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்புக் கோரினார் அப்துல் ரஸாக்

கராச்சி: நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த தனது மோசமான கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய ரஸாக், “நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறுதலாக நான் வாய் தவறி குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்துல் ரஸாக் பேசும்போது, “பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒரு மன எழுச்சி தேவை. அந்த காலங்களில் யூனிஸ் கான் ஒரு கேப்டனாக ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது" என்று கூறினார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாகித் அப்ரிடி, உமர் குல் போன்றோர் இதனை சிரித்து கைதட்டி ரசித்தனர்.

அப்துல் ரஸாக்கின் இந்த மோசமான கருத்தை அடுத்து அவரை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வந்தனர். "இது மோசமான முன்னுதாரணம்" என்பது போன்று ரசிகர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனையடுத்து, தொடர் எதிர்ப்பு காரணமாக தற்போது தனது பேச்சு குறித்து அப்துல் ரஸாக் மன்னிப்பு கோரியுள்ளார்.