தக்காளிச்செடிகளுக்கு நவீன முறையில் பந்தல் அமைக்கும் திட்டம்

 தக்காளிச்செடிகளுக்கு நவீன முறையில் பந்தல் அமைக்கும் திட்டம்
தக்காளிச்செடிகளுக்கு நவீன முறையில் பந்தல் அமைக்கும் திட்டம்

உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக மாறியுள்ளது. ஆண்டு முழுவதும் சாகுபடி சீசன் காலங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வரை சாகுபடி செய்யப்படுகிறது. மழை காலங்களில்தக்காளி செடி பாதிப்பதோடு, மண்ணில் விழுந்து காய்களும் அழுகி வீணாகி பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வரும் சூழல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில்தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளிச்செடிகளுக்கு குச்சி நட்டு, கம்பி கட்டி நவீன முறையில் பந்தல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதோடு விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

உடுமலை பகுதிகளுக்கு இத்திட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில் நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:- மழை காலங்களில் தக்காளி செடிகள் மற்றும் காய்கள் மண்ணில் விழுந்தும், மழை நீர் வடியாமலும், ஒட்டுமொத்த சாகுபடியும் பாதிக்கிறது.இதற்கு தக்காளி நடவு செய்த வயல்களில் 6 அடி குச்சி நட்டு, 3 வரிசை கம்பி கட்டி, செடிகளை, கயிறு வழியாக இணைத்து, பாதுகாக்கும் தக்காளி பந்தல் நடைமுறை உள்ளது.இவ்வாறு செய்யும் போது மண்ணோடு செடி, காய்கள் ஒட்டாததோடு மழை பெய்தாலும், தரமான தக்காளி அறுவடை செய்ய முடியும்

கூடுதல் மகசூல் பெறமுடியும். நடப்பாண்டு முதல் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பந்தல் அமைத்தால் தோட்டக்கலைத்துறை சார்பில், ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 100 ஹெக்டர் பரப்பளவில், மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் இந்த நடைமுறையில், பந்தல் அமைத்து, உரிய பில், ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பின்னேற்பு மானியமாக தொகையை பெற்றுக்கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.