“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம்.

“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம்.
“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம்.

“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் இருந்த நடிகர் விஷாலிடம்

உரையாடியதிலிருந்து …

நீங்கள் இருவரும் எப்படி எனிமி ஆகினீர்கள்?

நான் தான் ஆர்யாவை எனிமி ஆக்கினேன். முதலில் ஆனந்த் சங்கர் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் தலைப்பு வைக்கபடவில்லை. கதை கேட்டவுடன் நான் தான் இந்த பாத்திரத்தில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். நாங்கள் ஏற்கனவே இரும்புதிரை படத்தில், அர்ஜூன் சார் கதாபாத்திரத்திற்கு நடிக்க ஆர்யாவை  தான் அணுகினோம். ஆனால் ஆர்யா அப்போது அந்த மாதிரி கதாபாத்திரங்கள் செய்யும் சூழ்நிலையில் இல்லை.  எப்பொழுதும் வில்லன் கதாபாத்திரம் புத்திசாலிதனமாகவும், வலுவானதாகவும் இருக்கும் பட்சத்தில் படத்தில் ஹீரோ கதாபாத்திரமும் வலுவானதாக மாறும். இரும்புதிரை, திமிரு போன்று அமையும். நான் இதை சொல்லும் போது, ஆனந்த் அதிர்ச்சியடைந்தார். நீங்கள் இன்னொரு ஹீரோவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை என ஆனந்த் கூறினார். அவர் மீண்டும் திரைக்கதை வேலை செய்து, இறுதி வடிவத்தை கூறும் போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட, ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரி பெரிதாக பேசப்படும். அப்புறம் தான் எனிமி தலைப்பு வைத்தோம். இதை விட சிறந்த டைட்டில் இல்லையென்று முடிவு செய்தோம்.

ஆர்யா உங்களுடைய சிறந்த நண்பன் இந்த படத்தில் எனிமியாக எப்படி நடித்தார்?

ஆர்யா எதற்கு சர்பட்டா பண்ணான் என இப்போது தான் புரிந்தது. படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அவர் என்னை அடிக்க வேண்டும். நான் முகத்தை மூடிட்டு இருக்கேன். அவன் என் ரிப்ஸ்-ல் அடித்து கொண்டிருக்கிறான். நான் போதும், போதும் என சொல்லிகொண்டே இருக்கிறேன். அவன் அந்த பாக்ஸிங் ரேஞ்சில் இருந்து மாறவில்லை. அவன் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்-ற்கு கூட செல்லலாம். 4 வருடமாக டிரெய்னிங் எடுத்துகொண்டான். அவன் போட்டிக்கு செல்லும் அளவு தகுதியில் இருக்கிறான்.

கிளைமாக்ஸ் காட்சி தான் படத்தில் முக்கியமானதாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு சிறந்த எக்ஸ்பீரியன்சாக இது இருக்கும். இதை நாங்கள்  இருவரும் மீண்டும்  நடிப்பதற்கு பல காலம் எடுக்கும். நான் பாலா சார் செய்த ‘அவன் இவன், ஹரி சார் உடன் செய்த தாமிரபரணி போல், இந்த திரைப்படம் அதுவாக தானாக  அமைந்தது. படத்தின் கிளைமாக்ஸ் ஹாலிவுட் படம் போல் இருக்கும். படத்தின் VFX, இசை என எல்லாம் இணைந்து படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது . படத்தை இசையுடன் பார்த்த பிறகு, நான் ஆனந்தை கட்டிபிடித்தேன். பிறகு வெளியே வந்து, தயாரிப்பாளர் வினோத்திடம் இந்த படத்தை தயவுசெய்து தியேட்டருக்கு கொண்டு வாருங்கள் என கூறினேன். நான் அவருக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன். அவர் நினைத்திருந்தால், ஓடிடிக்கு கொடுத்து லாபம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் எங்களது கோரிக்கையை ஏற்று படத்தை புரிந்துகொண்டு, தியேட்டருக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார். படத்தில் கிளைமேக்ஸ் தான் சிறப்பாக இருக்கும். படபிடிப்பின் போது, இருவருக்கும் ரத்த காயம் தான் அதிகமாக ஏற்பட்டது. இருவரும் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை சென்று வருவோம்.

இருவரும் நண்பர்கள், ஆனால் திரையில் எப்படி சிரியஸாக நடித்தீர்கள்?

படத்தில் என் பெயர் சோழா. அவன் என்னை சோஜன் என அழைப்பான். படம் முழுவதும் அப்படியே இருக்கும். படத்தில் இயக்குனர் இருவருக்கும் சரிசமமாக இடம் கொடுத்துள்ளார். படத்தில் நான் ஆர்யாவிற்கு ஆலோசனை கூறுவேன். அவன் எனக்கு கூறுவான். இதன் பிறகு நாங்கள் மீண்டும் எதாவது படத்தில் சேர்ந்தால் அது இதை விட பெரியதாய் இருக்கும்.


படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் பற்றி தயாரிப்பாளர் கூறினார், நீங்கள் அதற்கு எதுவும் குரல் கொடுக்கவில்லையே?

குரல் கொடுக்கவில்லை என இல்லை. 10 வருடங்களுக்கு முன்னால் தீபாவளிக்கு 4 படங்கள் வரும் அப்போது 1200 தியேட்டர்கள் இருந்தன. இப்போது இயங்கும் தியேட்டர்கள் 900 தான் இருக்கும். தயாரிப்பாளர் வைத்த விண்ணப்பம் 250 தியேட்டர்கள் போதும் என நியாமான கோரிக்கையை தான் வைத்தார். தயாரிப்பாளர் வினோத் 250 தியேட்டர்கள் வேண்டும் என கேட்டதில் தவறில்லை. இதற்காக பின்னர் நாங்கள் உதயநிதியிடம் பேசினோம். இப்போது உறுதியான தியேட்டர்களின் எண்ணிக்கை 242. கொஞ்ச நேரம் முன் தான் ஒரு தியேட்டர் உறுதியானது. இப்போது சினிமாவில் சோலோ ரிலீஸ் என்பது வாய்ப்பே கிடையாது. ரஜினி சாருக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது அவர் படங்களின் பட்ஜெட் அப்படி, வியாபாரம் அப்படி. இந்தப்படத்தையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ஸ்கேலில் தான் தயாரித்துள்ளோம், அதற்கான வெளீயீடும் இதற்கு தேவை அது இப்போது நடந்திருக்கிறது. சந்தோஷம்.

முன்பை போல் விஷாலை அதிகம் வெளியில் பார்க்க முடிவதில்லையே , உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்து விட நினைக்கிறீர்களா ?

அப்படியெல்லாம் இல்லை வேலையை எப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இப்போது நடிகர் சங்க வேலைகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். கூடிய விரைவில் இறுதி தீர்ப்பு வரப்போகிறது இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது. இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. கண்டிப்பாக அதையும் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன்.

அடுத்த தீபாவளி உங்களுக்கு தலை தீபாவளியாக இருக்குமா ?

அஜித் சார் படம் பற்றி கேட்கிறீர்களா ? ( சிரித்து விட்டு) எனக்கே தெரியவில்லை. என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள். நடக்கும் போது அதுவே தானாக நடக்குமென நம்புகிறேன். நடக்க வேண்டியது கண்டிப்பாக நடக்கும்.

தொடர்ந்து உங்கள் சொந்த தயாரிப்பில் நடித்துவிட்டு, இப்போது வெளித்தயாரிப்பில் நடிப்பது எப்படி இருக்கிறது ?

ரொம்ப நன்றாக இருக்கிறது இப்போது அடுத்த படமும் வினோத் உடன் இணைகிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் நடிகருக்கு ஒரு புரிதல் வேண்டும். அது வினோத்திடம் இருக்கிறது. சினிமாவை வெறும் வியாபாரமாக பார்க்காமல் ரசித்து ரசித்து செய்கிறார். அவருடன் வருடம் ஒரு படம் செய்வதாக சத்தியம் செய்து தந்திருக்கிறேன்.

விஷால் ஃபிலிம் பேக்டரியில் ‘வீரமே வாகை சூடும்’ கிட்டதட்ட முடிந்து விட்டது. ஜனவரி வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறோம். வெளி தயாரிப்பிலும் நடிக்க வேண்டும் அப்போது தான் சினிமா நன்றாக இருக்கும்.

துப்பறிவாளன் 2 எப்போது ?

இதோ ஜனவரியில் மீண்டும் போகிறோம் ஏப்ரலில் படம் வந்துவிடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டுவிடக்கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும்.

அந்தப்படம் உங்கள் சொந்த தயாரிப்பாக இருக்குமா ?

கண்டிப்பாக VFF நிறுவனமே ஒரு கோபத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் வெறும் 10000 ரூபாய் கையில் வைத்து கொண்டுதான் VFF ஆரம்பித்தேன். VFF என்பது விஷால் ஃபிலிம் பேக்டரி அல்ல வென்ஞ்சன்ஸ் ஃபிலிம் பேக்டரி. எனக்கு நடந்த துரோகங்கள் கோப்பைகளில் தான் இந்த நிறுவனமே ஆரம்பித்தேன் இயக்குநர் தவறு செய்யும்போது அதை சரிசெய்ய வேண்டியது என் கடமை. துப்பறிவாளன் 2 வுக்கு அவரை லண்டனுக்கு கூட்டி சென்றிருக்க கூடாது அது என் தவறு. இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்.

 நிறைய துரோகங்கள், கூட இருந்தவர்களே குழி பறிப்பது இதைப்பற்றியெல்லாம் உங்கள் கருத்து ?
நல்ல விசயம் தான் அரசியலுக்கு வரும் முன்னர் இதைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிற விசயங்கள் பள்ளியிலோ புத்தகத்திலோ கிடைக்காது. இது மாதிரி சம்பங்கள் தான் பாடத்தை கற்றுக்கொடுக்கின்றது.

நடிகர் சங்கம் இந்த வருடம் நிறைவடைந்து விடுமா ?

ஒரு நாலுமாதம் டைம் கொடுத்திருந்தால் அப்போதே முடித்திருப்போம் அனைத்துமே முடிந்துவிட்டிருந்தது. இப்போது அதில் போட்டிருந்த கம்பிகளெல்லாம் துருப்பிடித்து கிடக்கிறது. இப்போது சரி செய்யவே 12 கோடி ஆகும். அதைப்பார்க்க அந்தப்பக்கம் போகவே கஷ்டமாக இருக்கிறது. இதோ தீர்ப்பு வரப்போகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் சீக்கிரமே முடிந்து விடும்.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். எல்லோரும் குடும்பத்துடன் கவனமாக கொண்டாடுங்கள்.

இவ்வாறு விஷால் கூறினார்.