ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டது!' - அபாயத்தில் கூடங்குளம் மக்களின் வாழ்வாதாரம்

ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டது!' - அபாயத்தில் கூடங்குளம் மக்களின் வாழ்வாதாரம்

இனிமேல் கூடங்குளம் அணு உலையிலிருந்து 5 கி.மீ பரப்பளவுக்குள் வீடுகள் அல்லது கடைகள் கட்டுவதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கு அணுவுலை நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்ற நேரங்களில், இடிந்தகரையில் உள்ள போராடும் மக்கள் சில விஷயங்களை முன்வைத்தார்கள். அவர்கள், ``அணு உலைத் திட்டங்களை அனுமதித்தால் சில வருடங்களில் இந்தப் பகுதியில் உள்ள ஊர்களைக் காலி செய்ய நேரிடும்" என்றனர். அப்போது அரசு அதை மறுத்தது. மக்கள் சொன்னது நடைமுறைக்கு வந்துவிடலாம் என்பதன் அறிகுறி தெரிய ஆரம்பித்துள்ளது.

இனிமேல் அணு உலையிலிருந்து 5 கி.மீ பரப்பளவுக்குள் வீடுகள் அல்லது கடைகள் கட்டுவதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கு அணுவுலை நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் வாங்குவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று காலை 10 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை ராதாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், `இப்போது, வீடு கட்டுவதற்கு தேசிய அணுமின் கழகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று ஆரம்பிக்கும் நடைமுறை நாளை எங்கு சென்று முடியும் என்று எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டுவருவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, மக்களை இந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றுவதுதான் நோக்கம். அணுவுலைகளைச் சுற்றி குறிப்பிட்ட மக்கள்தொகைதான் இருக்க வேண்டுமென்ற விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்படும். வீடுகள் கட்ட உள்ளூர் ஊராட்சி அல்லது நகர நிர்வாகத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமென்பதுதான் பொதுவான நடைமுறை. அதைவிடுத்து, அணுசக்தி துறையிடம் அனுமதி வாங்கக் கோருவது எந்த விதத்தில் நியாயம்?

இந்த மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரானது. போராட்டம் நடைபெற்ற நேரத்தில் போராடும் மக்களைச் சந்தித்த முதல்வர் முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தார். அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு எந்தவிதமான சின்ன அசௌகரியம்கூட ஏற்படாது, வழக்கம்போல் வீடுகள் கட்டி, விவசாயம் செய்து, மீன் பிடித்து, கடைகள் நடத்தலாம் என்று உறுதி அளித்திருந்தார். ஆனால் இன்று, அவர் பெயரால் செயல்படும் அரசு அவர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிப்பது அவருக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம். தமிழக அரசு இந்த அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

`கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் அவர்களுடைய நலன்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு நடக்கும் திட்டங்களும் அவர்களை மேன்மேலும் ஒடுக்கிக்கொண்டேயிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்தப் பிரச்னையும் இணைந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, அப்பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.